இறைவா! நீயே போதுமானவன். உனக்கே எல்லா புகழும்...
விபத்தொன்றின் காரணமாக முழு உடலும் இயக்கமற்றிருக்கும் சவூதியைச் சேர்ந்த பிரபல அழைப்பாளர் அப்துல்லா Bபானிஃமா அவர்களையே படங்களில் காண்கிறீர்கள்.
தலைப்பகுதி மட்டும்தான் இயங்குகின்றது. அவரால் நடக்கவோ எழும்பவோ கை, கால்களை அசைக்கவோ முடியாது. ஆனால் சோர்ந்து விடாது தன்னம்பிக்கையுடன் மார்க்கத்தைப் போதித்து வருகின்றார்.
ஒரு பேட்டியில் கீழ்வரும் தகவலை எம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:
"வாதம் ஏற்பட்டு என்னைப் போலவே பாதிக்கப்பட்டுள்ள எனது நண்பரொருவர் என்னிடம் கூறினார்:
"உன்னையும் என்னையும் விட மோசமான நிலையில் இருக்கும் ஒருவர் பற்றிக் கூறவா" என்று கேட்டார்.
"எம்மை விட மோசமானவரா" என்று யோசிக்கும்போதே நண்பர் தொடர்ந்தார்:
"பிறப்பில் இருந்தே உடல் ரீதியாகவும்,உள ரீதியாகவும் பாதிக்கப்பட்ட எனது சாச்சாவின் மகன் ஒருவர் இருக்கின்றார். பிறந்தது முதல் படுக்கையிலேயே இருக்கின்றார். பால் அல்லது ஜூஸ்,தண்ணீர் இவைதான் அவரது உணவு. அதுவும் மூக்கின் ஊடாகவே.
ஒருநாளைக்கு மூன்று நேர உணவு. அவரது நிலையை நினைத்துப் பாருங்கள்.
வழமைபோன்று ஒருநாள் காலை உணவைக் கொடுத்து விட்டு பகல் நேர உணவைக் கொடுக்க வந்தபோது படுக்கை முழுவதும் ரத்தம் பரவியிருந்ததை வீட்டார்கள் கண்டனர்.
எங்கிருந்து இரத்தம் வருகின்றது என்று பார்த்தபோது அவரது இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.
என்னதான் நடந்தது?
அவரது அறைக்குள் நுழைந்த எலியொன்று அசைவற்றிருந்த அவரின் இரு விரல்களை கடித்திருக்கின்றது!
கடிக்கும்போது அவரால் தனது இடத்தில் இருந்து எழும்பவோ,நகரவோ உதவி கேட்கவோ முடியவில்லை!
பார்த்து கண்ணீர் வடிப்பதைத் தவிர அவரால் எதுவும் செய்ய முடியவில்லை" என்று கூறி முடித்தார்.
சகோதரா...
இரு கைகள், இரு கால்களுடன் நடமாடி, சிரித்துப் பேசி ஆரோக்கியமாக வாழும் நீ உன் மீதான இறைவனின் அருளின் பெறுமதியை உணர்ந்துள்ளாயா?
எத்தனை அருள்கள்!!!
அதற்காக நன்றி கூறுகின்றாயா?
உனது ஆரோக்கியமும் நீடிக்கும் என்பதற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளாயா?
உன் வாழ்வை எப்படி கழிக்கின்றாய்?
விழித்துக் கொள்..
பாவத்தில் இருந்து விடுபட்டு இறைவனின் பக்கம் திரும்பி விடு.
சிறுசிறு துன்பங்களை விடு...
உன்னிடமுள்ள அருள்களுக்காகவும்
உன் ஆரோக்கியத்திற்காகவும் நன்றி கூறி அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்.
No comments:
Post a Comment